“மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விடாதீர்கள்” - பேரவையில் உதயநிதி அறிவுரை

“மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விடாதீர்கள்” - பேரவையில் உதயநிதி அறிவுரை
Updated on
3 min read

சென்னை: “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. சிறுகுறு தொழில்கள் மின் வெட்டால் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் மின்சாரம் இல்லை என்று விடுமுறை விடுகிறார்கள்.

மின்வெட்டுப் பிரச்சினையை தீர்க்க அரசின் நடவடிக்கை என்ன என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.

ஆளுநர் மகிழ்ச்சிதான் முக்கியமா?

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறை பாடப்பட்டது. ஆனால், தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபை மீறி தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை மற்றும் தேசிய கீதம் ஒருமுறை பாடுவது தான் வழக்கம். ஆனால், தேசிய கீதம் மட்டும் ஏன் 2 முறை பாடப்பட்டது. இதே கோரிக்கையை இதற்கு முன்பு இருந்த ஆளுநர் எங்கள் ஆட்சிகாலத்திலும் வைத்தார். ஆனால், எங்கள் முதல்வர் உறுதியாக இருந்து இந்த அவையின் இறையாண்மையை காத்தார்.

பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. அதனால் அங்கே வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை நமது ஆளுகைக்குள் உள்ளது. நமது ஆளுகையில் உள்ள சட்டப்பேரவையை ஏன் ஆளுநர் வசம் ஒப்படைத்தீர்கள். என்ன சமரசம் நடந்தது. ஏன் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. அப்படியானால் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இருமுறை பாடச் சொல்லி நீங்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கலாம்.

தவெக உறுப்பினர்கள் பேசும்போது, “ஆளுநர் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டோம்; ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தார்” என மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். தவெகவினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தது தான் முக்கியம் போல தோன்றுகிறது. உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?” என்றார்.

உதயநிதியின் உரையை இடைமறித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற நமது அனைவரின் நோக்கத்தின்படியே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருக்கிறது. அதேபோல, தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டத்தில் என்ன தவறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

‘தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்’

தொடர்ந்து பேசிய உதயநிதி, “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள். மின் துறை அமைச்சர் இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்கள் என்கிறார். அப்படியானால் அடுத்த இரு நாட்கள் மின்சாரம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் மின்சாரம் இல்லை என்று விடுமுறை விடுகிறார்கள்.

விசிக தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் சென்றபோது மின்சாரம் இல்லாததால், ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமலே திருமாவளவனுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பவர் ஷேரிங் கொடுத்த கட்சிக்கு, இப்போது தமிழகத்துக்கு பவர் கொடுக்க முடியவில்லை.

இரு நாட்கள் முன்பும் ஆளும் கட்சி தவெக அலுவலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டிருக்கிறது. “ஆளுங்கட்சியா இருந்தும் பனையூரிலேயே பவர் இல்லையே?” என அங்கு வந்தவர்கள் புலம்பிவிட்டுப் போனதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு இப்போது இருளில் மூழ்கியுள்ளது. சிறுகுறு தொழில்கள் மின் வெட்டால் முடங்கியுள்ளது.

மின்வெட்டால் மோட்டார் பம்பு செட்டுகள் இயக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது மின்வெட்டுக்கும் திமுகதான் காரணம் என்கிறார்கள். எங்கள் ஆட்சியில் ஏற்படாத மின்வெட்டு, இப்போது ஏற்படக் காரணம் நிர்வாக திறமையின்மையா? அல்லது தொழில்நுட்ப பிரச்சினை உள்ளதா. அதனை தீர்க்க அரசின் நடவடிக்கை என்ன என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.” என்றார்.

‘விவசாயிகளுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை’

மேலும் உதயநிதி பேசுகையில், “டெல்டாவில் 6 லட்சம் ஹெக்டர் குறுவை சாகுபடி நடக்கும். இந்த முறை ஜூன் 12-ல் மேட்டூரில் தண்ணீர் திறக்காததால் குறுவை தொகுப்பு ரூ.136 கோடிக்கு அறிவித்துள்ளார்.

இது போதவில்லை என விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடுகின்றனர். தேர்தலுக்கு முன்பு 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்கள். விவசாயிகளை ஏமாற்றாமல் முழுமையாக பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தியுள்ளீர்கள்.

மேட்டூர் அணை திறக்காதது, பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம், மேகேதாட்டு விவகாரம் என விவசாயிகள் இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள்.” என்றார்.

‘ஓரே மாதத்தில் இத்தனை சாதனைகளா?!’

“நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என முதல்வர் விஜய் பேசியுள்ளார். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் விஜய் பேசியிருக்கிறார்.

திரைப்படத்தில்தான் ஐந்து நிமிடத்தில் ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் ஒரே மாதத்தில் இந்த சாதனைகளை எல்லாம் செய்ய முடியாது. எனவே முதல்வர் சொன்ன சாதனை எல்லாம் யாருடைய ஆட்சியில் வந்தது என்று மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளார்கள். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தவெக தான் கொண்டு வந்துள்ளது என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.” என விமர்சித்துப் பேசினார்.

‘ஆளும் கட்சி வரிசையிலும் உள்ளோம்’

“ஆளுநர் உரைக்கும் கள யதார்த்தத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால், ஆளுநர் உரை ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கு உதவியாக இருக்கிறதே தவிர; உண்மையான பிரச்சினைகளுக்கு கைகொடுப்பதாக தெரியவில்லை. ஆளுங்கட்சியின் நிறை குறைகளை விமர்சிப்பதுதான், எதிர்க்கட்சிகளின் கடமை. எனினும், எங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சிகளை விட அதிக பொறுப்பு இருக்கிறது.

ஏனெனில், திமுகவின் வாக்குகளை வாங்கிய எங்களுடைய கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் மட்டும் இல்லை, ஆளும் கட்சி வரிசையிலும் உள்ளோம்.” என்று உதயநிதி கூறினார்.

தமிழக அரசுக்கு நன்றி

“மகளிர் உரிமைத் தொகையை தொடர்ந்ததற்கும், எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீடித்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி.” என்று உதயநிதி தெரிவித்தார்.

அதேவேளையில், “நாங்கள் தொடங்கிய ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு முடக்க முயற்சிக்கிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் பயனடைந்துள்ளனர்.

பாஜகவின் பிரதிபலிப்பா?

தொடர்ந்து பேசிய உதயநிதி “இந்து சமய அறநிலையத் துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய் அதன் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். இது, அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என சொல்லும் பாஜகவின் குரலையே தவெகவும் பிரதிபலிக்கிறதா?.” என்று பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுங்கட்சிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவனம் ஈர்த்தார்.

“மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விடாதீர்கள்” - பேரவையில் உதயநிதி அறிவுரை
“மேகேதாட்டு தீர்மானத்தில் விதிகளுக்கு புறம்பாக திருத்தம்” - வெளிநடப்புக்குப் பின் இபிஎஸ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in