

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் இரா.பாஸ்கரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.
சென்னை: நேதாஜி 129-வது பிறந்த நாளையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பராக்கிரம தினம் ஆக கடைப்பிடிக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில், அசைக்க முடியாத துணிச்சலும், தளராத மனவுறுதியும் கொண்ட ஒரு தலைவரை நாம் போற்றுகிறோம்.
அவரது அச்சமற்ற தலைமை, லட்சக்கணக்கான இந்தியர்களிடையே தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் தேசிய உணர்வை தட்டியெழுப்பியது” என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ” வெள்ளையனால் கறை படிந்த என் தேசத்தை, அவனின் ரத்தம் கொண்டே துடைத்து சுதந்திர இந்தியாவை மலரச் செய்வேன் என முழங்கி, சுதந்திர பிரகடனம் செய்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக போர் முழக்கம் செய்தவர்.
வங்கத்து சிங்கம், பாரத தேசத்தின் ஒப்பற்ற தலைவர், இன்றைய இளைஞர்களுக்கும் நரம்பு புடைக்கும் இவர் பெயரைக் கேட்டால் வீரமிகு சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில் “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் புரட்சியாளரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
அவரது வீரம், உறுதியான நிலைப்பாடு மற்றும் அறிவுசார்ந்த தலைமைத்துவத்தால், நாட்டை சுதந்திரப் பாதையில் வழி நடத்தினார். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு எப்போதும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.