

பி.டி.அரசகுமார்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.டி.அரசகுமார், சென்னை சாலிகிராமத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்தார். திமுகவின் செய்தித் தொடர்பு குழுத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை அணுகியுள்ளார்.
பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல பள்ளி நிர்வாகிகளிடம் பெருமளவு பணம் வசூலித்துள்ளார். அந்த வகையில், ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பி.டி.அரசகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி ஆதாரங்களையும் திரட்டினர். இந்த மோசடி தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 59 தனியார் பள்ளிகள் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளன. பி.டி.அரசகுமாரின் தொடர் மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான நகல் சிறையில் உள்ள பி.டி.அரசகுமாரிடம் வழங்கப்பட்டது.