

சென்னை: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு சேகர் பாபு தான் காரணம் என திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், “தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தை காட்டி நிற்கிறார்” என்று திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், சேகர் பாபுவை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை. என் கண்களை மூடினாலும் மு.க.ஸ்டாலின் முகமே வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை. இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத் தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமை நடவடிக்கை எடுத்தால் தான் உண்மையான திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக் காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு அவர்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரந்தாமன், இந்த முறை வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. இதற்கு காரணம் சேகர்பாபு தான் என்று பேச்சு நிலவி வந்தது.
தற்போது, தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், சேகர் பாபுவை நேரடியாகவே முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் தாக்கி பேசியிருப்பது, திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.