

மதுரை: “அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா குருவி லெட்டர் பேடு கட்சிகூட நம்பி வரவில்லை. மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளதால், அதிகாரத்தை தேடி தற்போது பலரும் வருகின்றனர்” என தவெகவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அம்மா சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், நடந்த அன்னதானம் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கட்சி தலைமை மீது மன தாங்கல் ஏற்பட்டு சிலர் எதிரியிடம் சரணாகதி அடைக்கின்றனர். இது போன்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது, நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்த வரலாறும் உண்டு.
தாய் அருமை தெரியாமல் சிலர் அன்பும், அரவணைப்பும் எங்கே கிடைக்கும் என, தேடி ஓடும் சூழலை பார்த்தால் வேதனையாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் கருத்து வேறுபாட்டால் சென்றுள்ளனர். அவர்களுக்கு தெளிவு கிடைக்கும் போது மீண்டும் தாய் கழகத்திற்கு வருவர். நம்மை பார்த்து சில சில்லறை பசங்க சிரிப்பா சிரிக்கிறார்கள். நாங்க தோத்து தான் போயிட்டோம்; செத்துப் போகவில்லை.
தம்பிகளே புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் நாங்கள் எத்தனையோ இழந்து உள்ளோம். எத்தனை விஜய் வந்தாலும் நாங்கள் பார்ப்போம். அதிமுக பல சோதனை, வேதனைகளை தாண்டி வென்றுள்ளது. கோடான கோடி தொண்டர்கள் ஆணிவேராக இருந்து இந்த இயக்கத்தை தாங்கி பிடித்துள்ளனர்.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா குருவி லெட்டர் பேடு கட்சியும் நம்பி வரவில்லை விஜய் தம்பி. மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளதால், அதிகாரத்தை தேடி வருகின்றனர். உங்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு அதிமுக பொறுப்பல்ல.
விஜய் தம்பி , உயிர் ஒரு முறை தான் போகும் உங்களுக்கு எச்சரிக்கையாகவும், அன்போடும் சொல்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு வட்டம். மேலே இருக்கிறது கீழே வருவது இயற்கை நீதி. உழைப்பை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் பலன் உண்டு. கிடைத்தவர் எல்லாம் கொண்டு கட்சி நடத்தினால் பலன் இல்லை தம்பி விஜய்.
அமைச்சர் நிர்மல்குமார் அமமுக, பாஜக, அதிமுக தற்போது தவெகவிடம் அடைக்கலம் ஆகியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என, தெரிந்தால் அதிமுகவில் மீண்டும் அடைக்கலம் ஆகியிருப்பார். அதிமுகவை சேர்ந்த 25 சட்டபேரவை உறுப்பினர்களை விஜய் சந்தித்து சால்வை அணிவித்தது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 65 சதவீதம் மக்கள் விஜய் வேண்டாம் என வாக்களித்துள்ளனர். இதை அவர் புரிந்தால் ஆள் பிடிக்கும் வேலையை செய்ய மாட்டார். இக்கணக்கு புரியாமல் கைக்கூலிகளை வைத்து ஆட்களை பிடிக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா என்ற பைத்தியக்கார அமைச்சர், 50 சதவீத அதிமுகவினரை பிடித்து விட்டதாக கூறுகிறார். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்பது தெரியவில்லை. இவரை போன்று அரைவேக்காடு கிறுக்கு அமைச்சர்களை அமைச்சரவையில் உட்கார வைத்துள்ளனர். அவர்களை நாம் பார்க்கவேண்டும் என்பது தலைவிதி. இவ்வாறு ஆர்பி.உதயகுமார் கூறினார்.