

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்தது. அதாவது, எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் என இரண்டு அணிகள் உருவாகின. இதையடுத்து, அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கட்சியில் இணைந்தது அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், சி.விஜயபாஸ்கரும் தவெகவில் இணையப் போவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரின் இந்தப் பதிவு, கட்சிக்குள் நிலவும் புகைச்சலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இது குறித்து சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் ‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது, எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.