தெலங்கானா அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

தெலங்கானா அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
Updated on
1 min read

தெலங்கானா: தெலங்கானாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறுதானிய இட்லி, ராகி கூழ் மற்றும் பால் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தெலங்கானா அரசு 2026-27 கல்வியாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, இன்று ஹைதராபாத்தில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது. இதில் சிறுதானிய இட்லி, ராகி கூழ் மற்றும் பால் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாணவர்களுக்குப் பல்வேறு வகையான உணவுகள் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. இதில் சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உணவுப் பட்டியலில் சிறுதானிய இட்லி மற்றும் ராகி கூழ், பால், தோசை, பூரி, போண்டா போன்ற உணவுகளும் இடம்பெற்றுள்ளன

இந்தத் திட்டத்தை ஹைதராபாத்தில் தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறுகையில், “எந்தவொரு குழந்தையும் வெறும் வயிற்றுடன் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசு கல்வி நிறுவனங்களிலேயே காலை மற்றும் மதிய உணவை உட்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்தச் சத்தான உணவு வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
அமெரிக்காவில் ஸ்கை டைவிங் விமானம் நொறுங்கி விபத்து: 12 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in