

மசினகுடி: நீலகிரி மாவனல்லாவில் பெண்ணைக் கொன்ற வயது முதிர்ந்த ஆண் புலி வனத்துறை வைத்திருந்த கூண்டுக்குள் இன்று (டிச.11) அதிகாலை சிக்கியது.
நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்லா பகுதியில், கடந்த மாதம் 24-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த, நாகியம்மாள் (60) என்பவரை புலி தாக்கிக் கொன்றது. வனத்துறையினர் புலியைப் பிடிக்க, 3 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர் .
இந்நிலையில், புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில், 3-ம் தேதி சிறுத்தை சிக்கியது. வன ஊழியர்கள் அதே பகுதியில், அதை விடுவித்தனர். 8-ம் தேதி காலை, மாவனல்லா பகுதியில் கன்றுக் குட்டியை புலி தாக்கி இழுத்துச் சென்று கொன்றது.
மேலும், செம்மனத்தம் சாலையை ஒட்டிய பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்க முயற்சித்தது. அதனை பார்த்து மக்கள் சப்தமிட்டதால், புலி ஓடியது.
மாடு சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர், புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.
பழங்குடி பெண்ணை தாக்கிய குறிப்பிட்ட அந்த புலியை அதன் உடல் வரிகளைக் கொண்டு அடையாளம் காணும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 3-ம் தேதி எதிர்பாராத விதமாக கூண்டுக்குள் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதே பகுதியில் அந்தச் சிறுத்தையை உடனடியாக விடுவித்துள்ளனர். தொடர்ந்து புலியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மாவனல்லா பகுதியில் அமைத்திருந்த கூண்டுக்குள் இன்று அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
கூண்டுக்குள் சிக்கிய புலி: வேட்டைத்திறன் இழப்பால் கால்நடைகளையும் பழங்குடி பெண்ணையும் இந்தப் புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் வனத்துறை, அந்த புலியை அடையாளம் காண்பதுடன் அதன் உடல்நிலை, வயது போன்றவை குறித்தும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் வேட்டையாடும் உடல் திறனை அந்தப் புலி இழந்திருப்பதை உறுதி செய்தால் மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.