மதுரை, வேலூரை தொடர்ந்து மார்ச் 11-ல் பிரதமர் திருச்சி வருகை
சென்னை: மதுரை, வேலூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி மார்ச் 11-ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேஜகூ சார்பில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், பிரதமர் மோடி அடுத்த மாதம் 3 முறை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வரும் மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் தேஜகூ தலைவர்களுடன், புதிதாக இணையவுள்ள கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் தொடங்கிவைக்கிறார். பின்னர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைத் தொடர்ந்து மார்ச் 7-ம் தேதி வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
பின்னர், மார்ச் 11-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.பிரதமரின் பயணங்களை ஒருங்கிணைக்க, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவிலான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
