

சென்னை: சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் பயணம் செய்ய 148 பயணிகள் காத்திருந்தனர்.
அப்போது, விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. விடிய விடிய விமான நிலையத்திலேயே பயணிகள் காத்திருந்தனர்.
30-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீடுகளுக்கு சென்றனர். பின்னர், விமானம் 8 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 4 மணிக்கு கொல்கத்தா புறப்பட்டு சென்றது.
அதேபோல், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.25 மணிக்கு 120 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 11 மணிக்கு புறப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று முன் தினம் இரவு 10.05 மணிக்கு 167 பயணிகளுடன் புனே புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தாமதம் ஆனதால், நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வந்ததால், இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டன” என்று தெரிவித்தனர்.