

சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், இவர்களுடன் சுயேட்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைநகரான சென்னையை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முன்னாள் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இணைந்து திருவிக நகர் ரவிச்சந்திரன், எழும்பூர் தமிழன் பிரசன்னா, துறைமுகம் சேகர்பாபு, ராயபுரம் சுபேர்கான், பெரம்பூர் ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் எபினேசர் ஆகிய திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
அதிமுக வேட்பாளர்களான வில்லிவாக்கம் தொகுதி விஜயகுமார், அண்ணாநகர் கோகுல இந்திரா, தி.நகர் சத்யா ஆகியோரை ஆதரித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார்.
பாஜக வேட்பாளர்களான ஆவடி தொகுதி வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா, மயிலாப்பூர் தமிழிசை சவுந்தரராஜன், தாம்பரம் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்,பல்லாவரம் ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
தவெக தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களான தாம்பரம் சரத்குமார், பொன்னேரி ரவி, வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா, தி.நகர் என்.ஆனந்த் ஆகியோரை ஆதரித்து ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.