

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி அருகே தரையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பொள்ளாச்சி: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு ஊக்கத்தொகை ஒரு ரூபாய் உயர்த்தி அறிவித்ததை விவசாயிகள் ஏற்கவில்லை.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூர் கொள்முதல் நிலையத்துக்கு வந்த விவசாயிகள் பாலை கொள்முதல் நிலையத்துக்கு வழங்காமல், வீதியில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “கேரளாவில் லிட்டருக்கு ரூ.53 வரை வழங்கப்படுகிறது. எங்களுக்கு வழங்கப்படும் தொகையானது எந்த விதத்திலும் உபயோகம் இல்லை. மாட்டுக்கு தேவையான தீவனம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியை நஷ்டத்தில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது.
ஆனால் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகி உள்ளார்கள். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, லிட்டருக்கு 50 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றனர்.