

சென்னை: வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும், இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ் வழங்குவதை செயல்படுத்த தமிழக பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 6.96 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அதில், 23 சதவீதம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதும், 73 சதவீதம் வீடுகளிளும் நடக்கிறது. 4 சதவீதம் எதிர்பாராத விபத்துகள் காரணமாக உள்ளது.
இந்நிலையில், இறப்புக்கான முழுமையான காரணங்களை கண்டறிந்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் செய்யும் ஆய்வை தமிழக பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
இறப்புக்கான காரணங்கள் பதிவு
முதல்கட்டமாக, கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2023-ம் ஆண்டுகளில் இறந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், எவ்வித காரணமும் இன்றி, வயது மூப்பு காரணமாக இறந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, இறப்புக்கான நோய் உள்ளிட்ட காரணங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வீடுகளில் இறந்தவர்களின் விபரங்கள் அடிப்படையில், அவர்களின் இறப்புக்கான காரணம் பதிவு செய்யப்பட்டது.
அதில், 98 சதவீதம் இறப்புக்கான காரணம் கண்டறிந்ததில், 20 சதவீதம் வரை இதய நோயாலும், 7 சதவீதம் நீரிழிவு நோய் போன்றவற்றாலும் இறப்புகள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, பெரம்பலுார், திருநெல்வேலி உட்பட 10 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். பின்னர், மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கை
வரும் காலங்களில் வீடுகளில் இறந்தாலும், இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலமாக உறுதி செய்து சான்றிதழ் வழங்குவது கட்டாயமாக்கப்படும். இறந்தவர்களின் இறப்புகளை முறையாக பதிவு செய்யுமாறு அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் மூலம் ஒரு பகுதியில் அதிகப்படியாக இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து, அங்கு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.