

சென்னை: மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற தாக்குதல் குறித்து அமைச்சர் எ.வ. வேலு கூறியது தவறான தகவல் என்று தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தலைவர் தோ.வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிப்.19 அன்று பேரவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, "மாத உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை காவல்துறை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது. அமைப்பின் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணியை காவல்துறை நடத்திய விதம் ஏற்புடையதல்ல" என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ஜான்சிராணியை காவல்துறை தாக்கவில்லை என்றும் அவர் தவறி விழுந்ததாகவும் அவரை உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு போலீஸார்தான் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் கூறியது உண்மைக்கு புறம்பானது. இதில் உள்நோக்கம் இல்லையெனில், கண்ணியமான காக்கிச்சட்டையில் பெயர் பொறிக்கப்படாத (பெயர்களை கழற்றி வைத்துவிட்டு) உயர் அதிகாரிகள் முதற் கொண்டு காவலர்கள் வரை இந்த இழிவான செயலில் ஈடுபட்டது எதற்கு. மேலும், எங்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. காவல் துறையினரின் இந்த காட்டுமிராண்டி செயலை முறைப்படி சந்திப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.