

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பழனிசாமி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு நேற்று அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகம் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்படும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு, சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும்.