

சென்னை: சென்னை, மூலக்கடை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், கொரட்டூர், வன்னியர் 2-வது தெருவில் மனித முடியில் ‘விக்’ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிறுவனம், தனது தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிறுவனம், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நேற்று காலை கொரட்டூரில் உள்ள அலுவலகம்,மூலக்கடையில் உள்ள குமாரின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. சோதனையின் முடிவில் கூடுதல் விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.