

இடது: சங்கர்
போடி: போடி நகராட்சி தலைவரின் கணவர் அலுவலகத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த அமலாக்கத் துறையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக அவரது ஏலக்காய் குடவுன் பூட்டை உடைத்து பல மணி நேரம் சோதனை நடைபெற்றது.
போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி (திமுக). இவரது கணவர் சங்கர். திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். ஏலக்காய் வர்த்தகம் செய்து வருகிறார். இதற்கான குடவுன் போடி - போடிமெட்டு சாலை ரயில்வே கேட் அருகில் உள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் கேரளா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குடவுன் பூட்டப்பட்டிருந்ததால் சங்கருக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், வெகுநேரம் வரை அவர் வராததால் பூட்டை உடைத்து குடவுனுக்குள் நுழைந்தனர். உள்ளேயே அலுவலகம் இருந்ததால் அங்கிருந்த ஆவணங்ளை ஆய்வு செய்யத் தொடங்கினர். மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி முகப்பில் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.
பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. இது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் கூறுகையில், “கடந்த 4-ம் தேதி இரவு கம்பம்மெட்டு அருகே கேரளா மாநிலம் சேத்துக்குழி எனும் இடத்தில் ஏலக்காய் வியாபாரி ஒருவர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கடந்த 7 மாதத்தில் ரூ.1, 200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் செய்திருந்தது விசாரணை நடைபெற்றது. இதற்கான ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போடியில் கடந்த 4-ம் தேதி முதற்கட்ட சோதனை நடைபெற்றது.
பெரியளவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இச்சோதனை முழுவீச்சில் நடைபெறுகிறது. முறையான ஆவணங்கள் உள்ளதா, வரி முறையாக செலுத்தப்பட்டதா என்பது குறித்து தொடர் புலனாய்வு நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி.நுண்ணறிவு பிரிவினரும் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சோதனை இரவு வரை நடைபெற்றதால் அதிகாரபூர்வமான தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வெளிமாநில வாகனங்களுடன் வந்து நடைபெற்ற புலனாய்வு சோதனை போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.