விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற நிறுவனங்களின் விமானக் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், அரசின் விதிமுறைகளை தாண்டி கட்டணங்களை உயர்த்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எனவே கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இண்டிகோ விமான நெருக்கடியால் மற்ற நிறுவனங்களின் விமான டிக்கெட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்புகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போதைய சிக்கல்கள் காரணமாக சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்த விஷயங்களை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைமை முழுமையாக திரும்பும் வரை கட்டணக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

நிகழ்நேர தரவு மற்றும் விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பயண தளங்களுடன் தீவிர ஒருங்கிணைப்பு மூலம் கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும். பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து ஏதேனும் மீறல் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற நிறுவனங்களின் விமான டிக்கெட்களின் விலை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்தது. இதனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்காக அதிகரித்தன.

எடுத்துக்காட்டாக, இடைவிடாத டெல்லி - மும்பை விமானத்திற்கான டிக்கெட் விலை ரூ.65,460 ஆக உயர்ந்தன. எகானமி - கிளாஸ் கொல்கத்தா - மும்பை விமான டிக்கெட் ரூ.90,000 ஆகவும், பெங்களூரு - புது டெல்லி கட்டணம் ரூ.88,000 ஆகவும் உயர்ந்துள்ளன.

விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
இண்டிகோ விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in