சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு: மாற்று ஏற்பாடு செய்ய மநீம கோரிக்கை

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு: மாற்று ஏற்பாடு செய்ய மநீம கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு விவகாரத்தில் தென்னக ரயில்வே போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் ரயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தொழிலாளர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் ரயில்களுக்காகக் காத்திருக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளால் ரயிலில் ஏற முடியவில்லை. கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் நமது மாணவர்களுக்கு இப்படியொரு சித்ரவதை கடுமையான உளநெருக்கடியை உண்டாக்குகிறது.

தென்னக ரயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு: மாற்று ஏற்பாடு செய்ய மநீம கோரிக்கை
புதுவை பள்ளி மாணவிகளுக்கு மார்ச் 8 முதல் HPV தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை இயக்குநர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in