

அசாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று தங்களது வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்களுடன் காம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் படகில் பயணிக்கும் தேர்தல் அதிகாரிகள். அப்போது, பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
திருவனந்தபுரம் / புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் கேரளா, அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிமாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்புக்குத் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் தமிழகத்துக்கு ஏப்.23-ம் தேதியும் மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் கேரளா, அசாம் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முடிந்தது. இந்நிலையில், 3 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 296 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நேரம்: புதுச்சேரி மற்றும் கேரளா, அசாமில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் போதுமான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்பாளர்களும் போதுமான அளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான தொகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா: கேரளாவைப் பொறுத்தவரை மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு, கடந்த 2016 முதல் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தொடர்ந்து 2 முறை ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றியைப் பெற எல்டிஎப் தீவிரமாக களத்தில் உள்ளது.
ஆளும் கூட்டணிக்கு எதிராக, சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) மற்றும் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆகியவை உள்ளன. இம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.கேரளாவில் இன்று நடைபெறவுள்ள தேர்தலில் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.32 கோடி ஆண் வாக்காளர்களும், 1.39 கோடி பெண் வாக்களர்களும், 2.42 லட்சம் வெளிநாட்டில் வசிக்கும் கேரள வாக்காளர்களும் அடங்குவர்.
அசாம்: அசாமில் 126 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக மற்றும் கவுரவ் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. மாநிலத்தில் மொத்தம் 2.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்காளர்களின் எண்ணிக்கை 9.50 லட்சமாக உள்ளது. இதில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 24,919 ஆகும். புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 1,099 வாக்குச்சாவடிகளில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதுச்சேரியைப் பொறுத்த வரையில் ரங்கசாமி தலைமையிலான ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
புதிய வரவு: புதிதாக வந்துள்ள நடிகர் விஜய்யின் தவெக புதுச்சேரி தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், பின்னர் சுயேச்சை ஆதரவுக் குழுவுடன் இணைந்து அக்கட்சி தேர்தலை சந்திக்கிறது. அசாம், கேரளா, புதுச்சேரி தேர்தல் முடிவுகள் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளன.