‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல்

சவாலான கேள்விகள்... சரவெடி பதில்கள்!
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நேர்காணலின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன்.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நேர்காணலின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன்.

படங்கள்: எஸ்.சத்தியசீலன்

Updated on
6 min read

சென்னை கிரீன்வேஸ் இல்லம். சனிக்கிழமை காலை 10.45 மணி. முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்திக்க காத்திருந்தோம். அவருடைய அறை வாசலில் கட்சிக்காரர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். பக்கத்து அறையில் அமர்ந்திருந்தோம்.

’அண்ணனுக்குத் தொண்டை வலினு சொல்றாங்க... மைக்ல கத்திக் கத்திப் பேசுறதுனால குரலே சன்னமாக இருக்கு.. அடுத்து தஞ்சை பிரச்சாரத்துக்குக் கிளம்பறார்போல.. இருந்தாலும் கட்சிக்காரங்கள சந்திக்காம விடறதில்ல. வணக்கம் வச்சு, அவருக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்பைக் காட்டி அனுப்பிவிடுகிறார்’ என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர்.

தேர்தல் நேரம் என்பதால், முக்கியத் தலைவர்களுடன் உட்கார்ந்து ஆற அமர, மாத்தி மாத்திக் கேள்விகள் கேட்டு சுவாரஸ்யமாக உரையாட முடியாத சூழல். நாம் முன்னரே பகிர்ந்த கேள்விகளைத் திரும்பத் திரும்பப் படித்து இபிஎஸ்சே பதில்களை ’டிக்டேட்’ பண்ணிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். உதவியாளர் ஒருவர் அங்கும் இங்கும் ஓடி பிரின்ட் எடுத்துக் கொடுத்து, இபிஎஸ்சிடம் திருத்தி வாங்குவதையும் காண முடிந்தது. சிறிது நேரத்திலேயே உள்ளே அழைக்கப்பட்டோம். வரவேற்றார்.

நாமே அறிமுகப்படுத்திக் கொள்ள முயன்றபோது, ‘உங்களைத் தெரியாமலா? நம்மதான் சந்திச்சிருக்கோமே?’ என்றவர், ‘ஏடாகூடமா கேள்வி கேட்டு வச்சுருக்கீங்க. இருந்தாலும் எனக்குப் புடிச்சிருந்தது. அம்மா வழில நேர்மையான அரசியல் பண்ணனும்னு நெனைக்கிறேன். கடுமையா உழைக்குறேன். பத்திரிகைக்காரங்க கேட்குறதுக்குப் பதில் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்ல’ என்றபடி சிரித்தார்.

அரசியல் களத்தில் அறியப்படும் விமர்சனங்கள், வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே கேள்விகள் தயாரித்தோம். மற்றபடி, தேர்தல் நேரத்தில் உங்களைச் சங்கடப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை... என்றேன்.

நீங்கள் வெளிப்படையாகக் கேட்டிருந்த கேள்விகளை விரும்புவதால்தான்... ’புடிச்சிருந்தது’ என்ற வார்த்தையைச் சொன்னேன்.. என்றபடி தொடர்ந்தார்.

நேரமின்மை காரணமாகவும், குரல் வளத்தைப் பாதுகாத்து அடுத்தடுத்த ஊர்கள்ல பேசணுங்கிறதுக்காகவும் இப்ப உங்ககிட்ட நெறைய நேரம் பேச முடியாத நிலைமை.

2009.. திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்துச்சுல்ல.. அப்போ, தேர்தல் வேல பாக்கச் சொல்லி அம்மா என்னைய மாதிரி சில முக்கிய நிர்வாகிகள அனுப்பிச்சிருந்தாங்க. நாங்களும் ஓடியாடி வேல செஞ்சோம். ஒருநாள் கூப்பிட்டு, எல்லார்கிட்டயும்... தொகுதில நெலவரம் எப்படி? நமக்கு சான்ஸ் எப்படி இருக்குன்னு கேட்டாங்க. மத்தவங்கள்லாம் ரொம்ப அருமையா இருக்குங்கம்மானு ரிப்போர்ட் குடுத்துட்டாங்க. நான் மட்டும்... ‘கஷ்டம்’னு சொன்னேன்.

அப்போ கட்சில சீனியரா இருந்தவங்க, ‘பழனிசாமி உன் கதை முடிஞ்சது.. அம்மாகிட்டயே போய் நெகட்டிவ்வா சொல்றியா’ன்னு பயமுறுத்துனாங்க. நான் என் கருத்துல தெளிவா இருந்தேன்.

நான் சொன்னபடித்தான் ரிசல்ட் வந்துச்சு.. அப்புறம் அம்மா கூப்ட்டு பாராட்டுனாங்க. எதுக்கு? உண்மையை, துணிச்சலா சொன்னதுக்காக.. நேர்மையா நடந்துக்கிட்டதுக்காக... ஒரு பேரியக்கத்தை வழிநடத்துகிற தலைவிக்கு அதன்பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரிச்சுது. அந்த உண்மை, துணிச்சல், நேர்மை புடிச்சுப்போய் அவங்க என்னைய வளர்த்ததாலதான் இந்த இடத்துக்கு வந்துருக்கேன்..

பேசிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தார்... ‘நேரமாயிடுச்சு...’ என்றவரிடம், ‘சமீபமாகத் தனிப்பட்ட விமர்சனங்கள் கடுமையாக இருக்கிறதே?’ என்று கேட்டதற்கு, ‘என்னிக்காச்சும் நான் மரியாதை இல்லாம பேசிப் பாத்துருக்கீங்களா? யாரா இருந்தாலும் அவர்களே.. என்று குறிப்பிடுவதுதான் என் வழக்கம். வம்பிழுத்தா எப்படி விட முடியும்? லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக... சும்மா விட்டா தொண்டர்கள் என்னையப் பத்தி என்ன நெனப்பாங்க..?’ என்றவாரே அறையில் இருந்து கிளம்பினார்.

’ரொம்ப நன்றி சார்.. வாழ்த்துக்கள்’ என்று சொல்லிவிட்டு நாமும் வெளியேறினோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நாம் பகிர்ந்துகொண்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே...

Q

ஒரு சாதாரண கிளைச் செயலாளராகத் தொடங்கி, கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் அந்தஸ்து வரை உயர்ந்துள்ளீர்கள். இந்த எளிய விவசாயப் பின்னணிதான் உங்களுக்கு அடித்தட்டு மக்களிடையே அசைக்க முடியாத வலுவான செல்வாக்கை உருவாக்கியுள்ளதா?

A

எங்களை ஆளாக்கிய புரட்சித் தலைவர் போதித்த, ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற தத்துவத்தைக் கடைபிடித்து எந்த பிரதிபலனும் பார்க்காமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியதன் விளைவாக இயக்கத் தோழர்கள் எனக்கு இந்த அந்தஸ்தைப் பரிசாக அளித்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பாடுபடுவேன். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்.

Q

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியிலிருந்து, கட்சியின் பொதுச்செயலாளராக நீங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்ன?

A

‘படுதோல்வி’ என்ற உங்கள் வார்த்தை சரியல்ல. தனித்துப் போட்டியிட்டாலும் எங்களுக்கென உள்ள வாக்கு சதவீதத்தை உலகுக்கு உணர்த்த அந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தனித்துப் போட்டியிட திராணியில்லாத தலைவர்களிடம் போய், தோல்வி பயத்தால்தான் கூட்டணி அமைத்துள்ளீர்களா என்று தைரியமாக உங்களால் கேட்க முடியுமா?

Q

’கட்சித் தலைமை தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் உங்களின் முதன்மை இலக்கு’ என்ற விமர்சனத்தையும், மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்ற கட்சிக்குத் தாவுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

கட்டுக்கோப்புடனும், கட்டுப்பாட்டோடும்தான் ஒரு இயக்கம் இயங்க வேண்டும் என்றுதான் எந்தவொரு கட்சித் தலைமையும் நினைக்கும். எங்கள் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டை போதித்தார். அவர் வழியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடை போட்டார்கள்.

நானும் அவர்கள் காட்டிய பாதையில் பயணம் செய்கிறேன். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்கு இருந்த வரை அனுபவித்துவிட்டு, கட்சிக்குத் துரோகம் செய்ததுடன், சுய லாபத்துக்காக அவர்கள் மாற்றுக் கட்சிகளில் சேருகிறார்கள். அதற்காகக் கவலைப்பட முடியுமா?

Q

‘பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை’ என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி தற்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது உங்கள் அரசியல் வியூகமா அல்லது டெல்லியின் அழுத்தமா?’

A

கூட்டணி என்பது தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைவது. 1999-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, 2004-ல் மீண்டும் கூட்டணி அமைத்தது. 1999-ல் பாஜகவோடு சேர்ந்த திமுக, 2004-ல் அங்கிருந்து விலகி காங்கிரசோடு சேர்ந்தது. தமிழகத்தின் தீயசக்தியான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் டெல்லி அழுத்தம் என்பது உங்கள் கற்பனை.

Q

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு சிதறும் என்ற கணிப்புகளை மீறி, அத்தனை சவால்களையும் முறியடித்து ஒற்றைத் தலைமையாக கட்சியை இரும்புக்கரம் கொண்டு வழிநடத்துகிறீர்கள். அந்த அரசியல் வலிமையும் சாதுர்யமும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

A

உண்மையான, விசுவாசமிக்க தொண்டர்கள் அம்மா மறைவுக்குப் பின் இந்த இயக்கம் பாழ்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் உண்மைத் தொண்டனான, உழைப்பாளியான எனக்கு ஆதரவளித்தார்கள். கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்கள், துரோகம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு ‘களை எடுத்து’ இயக்கத்தை பாதுகாத்திருக்கிறோம். தூய்மை அடைந்த எங்கள் இயக்கம் எதிரிகளோடு போராடி வருகிறது. களத்தில் வெற்றி நிச்சயம்.

Q

அமைச்சர்களை எதிர்த்துப் போராட வேண்டிய தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டதாகவும் சென்னையில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கொடுத்து பாஜகவின் வெற்றியை தடுக்கும்விதமாக உள்நோக்கத்தோடு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அண்ணாமலை தரப்பு குற்றம்சாட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

முழுக்க முழுக்க கற்பனையான, உள்நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்வி இது. தொகுதிகள் பங்கீட்டில் எங்கள் கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவொரு மனவருத்தமும் இல்லை.. வேண்டுமென்றே அண்ணாமலையின் பெயரை இழுத்தது ஏற்கத்தக்கதல்ல.

Q

நீட் விலக்கு, ஜிஎஸ்டி, கச்சத்தீவு போன்ற விவகாரங்களில் மத்திய அரசிடம் நீங்கள் உறுதியாக அழுத்தம் கொடுக்காதது.. கூட்டணி தர்மத்துக்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்ததுபோல் தெரிகிறதே?

A

இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் விட்டுக்கொடுத்தது அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக மற்றும் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்தான். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் திமுக இருந்தது. எனவே, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக திட்டங்களைக் கொண்டுவந்தது திமுக.

இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் திமுக ஆட்சியாளர்களைவிட நாங்கள் மத்திய அரசிடம் அதிகம் வாதாடி வருகிறோம். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பை 5 வருடங்களுக்கு மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத்துக்குப் பல்லாயிரம் கோடியை கொண்டு வந்தது அம்மா தலைமையிலான அதிமுக அரசு.

Q

சிஏஏ, மணிப்பூர் போன்ற விஷயங்களில் பாஜக நிலைப்பாட்டை ஆதரித்த பிறகு, சிறுபான்மையினர் வாக்குகளை நீங்கள் மீண்டும் எப்படிப் பெறப் போகிறீர்கள்?

A

எத்தனை காலத்துக்கு இதே உருட்டை உருட்ட முடியும். மணிப்பூர் பிரச்சினையில் உரிய முறையில் நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். சிஏஏ சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை நான் முதல்வராக இருந்த நேரத்தில், சட்டப்பேரவையில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியருக்கு என்ன பாதிப்பு என்பதை ஆதாரத்துடன் சொன்னால் பதிலளிக்கிறேன.

ஓட்டுக்காக தங்களை ஆதரிப்பது யார் என்பதையும் உண்மையிலேயே அவர்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதையும் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்தத் தேர்தலில் அவர்கள் முழுவிருப்பத்தோடு அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

Q

’மோடியும் அமித்ஷாவும்தான் உங்களின் கொள்கைத் தலைவர்கள்’ என முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் தொடர்ந்து விமர்சிப்பதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

A

சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் கொள்கைத் தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு சலாம் அடித்துச் செயல்படும் மு.க.ஸ்டாலினின் பிதற்றல் இது. எங்கள் ஆதர்ச தலைவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எங்கள் ஆட்சியில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேரடியாக குற்றம்சாட்ட இயலாமல் 2019 முதல் இதையே மேடைதோறும் பேசித் திரிகிறார்கள் ஸ்டாலினும், உதயநிதியும்.

Q

நீங்கள் என்னதான் திமுகவை குறை சொன்னாலும், ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் பல துறைகளில் முன்னணி மாநிலமாக இருந்ததாக உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மத்திய அரசே சான்றிதழ் தந்திருக்கிறதே?

A

சான்றிதழைக் காட்டுங்கள் பார்க்கலாம். முதலமைச்சர் அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளையே நீங்கள் கேள்வியாக்கியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

Q

பலமான திமுக அரசை சட்டப்பேரவைக்கு உள்ளேயும்வெளியேயும் ஆக்ரோஷமாக எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் உருவெடுத்துள்ளீர்கள். உங்களின் இந்த சமரசமற்ற போர்க்குணம் மக்கள் மத்தியில் உங்களுக்கான ஆதரவை அதிகரித்துள்ளதா?

A

ஆதரவு அதிகரித்துள்ளது என்பதைவிட உண்மைகளை எடுத்து வைக்கும் என்னைப் பார்த்து இந்த ஆட்சியாளர்கள் பயந்து போயுள்ளதையும் மக்கள் உணர்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசும்போது மட்டும் டி.வி நேரலை துண்டிக்கப்பட்டதில் இருந்தே இந்த அரசின் பயந்தாங்கொள்ளித் தனத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

Q

’திமுகவுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி.. அதிமுக ரேஸிலேயே இல்லை’ என தவெக தரப்பினர் சொல்வதை, அரசியல் அனுபவமிக்க ஒரு மூத்த தலைவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

அரசியலில் கருத்துச் சொல்ல தவெகவினருக்கும் சுதந்திரம் உள்ளது.

Q

திமுக அரசு ஈர்த்த முதலீடுகளை போலி என்கிறீர்கள். அப்படியெனில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவசங்களைத் தாண்டி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கான தெளிவான மாற்றுத் திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்?

A

‘முதலீடுகளை ஈர்க்கிறேன்’ என்று கூறிவிட்டு வெளிநாடுகளுக்கு ஸ்டாலின் குடும்பம் சுற்றுலா சென்று வந்தது. ஆனால், முதலீட்டை ஈர்த்தது போல் காட்டிக் கொண்டனர். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். எங்களின் முந்தைய ஆட்சிக் காலங்களைப்போல் அந்நிய முதலீட்டாளர்களை முறையாக ஈர்த்து தொழில் வளத்தைப் பெருக்குவோம்.

வேலை வாய்ப்பை உருவாக்குவோம். தமிழக அரசின் வருவாயைப் பெருக்கி, மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 2021 வரை செய்ததுபோல் இணையதளத்தில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுவோம். இவர்களைப் போல் வெள்ளைக் காகிதத்தைப் பதிலாக காட்ட மாட்டோம்.

Q

வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வருகிறது. இதனால் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு என்கிற போது, பிரதான எதிர்க்கட்சியாக அதைத் தடுக்கத் தவறிவிட்டீர்களா?

A

யார் சொன்னது.. அதிமுகவுக்கு பாதிப்பு என்று.. போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்படப் போவது திமுகதான். அது ஊருக்கே தெரியும்.

Q

ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்டத்தை ‘நடைமுறைக்குச் சாத்தியமில்லை' என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டு, இப்போது ‘கண்டிப்பாக நிறைவேற்றுவோம்' என வாக்குறுதி அளிப்பதை முரண்பாடாகக் கருதுகிறார்களே?

A

எங்களது தேர்தல் அறிவிப்புகளைச் சரியாகப் படித்துப் பார்த்தால் புரிந்திருக்கும். எங்களது தேர்தல் அறிக்கை சொல்வது என்னவென்றால் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும் என்பதுதான்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் திமுக ஏமாற்றி விட்டது. இந்தக் கேள்வியை நீங்கள் திமுகவிடம் கேட்டிருக்க வேண்டும்.

Q

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிமுக ஆட்சியில் நீங்கள்தான் முன்னெடுத்தீர்கள், இப்போது அதற்கு எதிராகப் பேசுவது.. எந்தவகையில் சரி?

A

மக்களைப் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அன்றும், இன்றும் எங்கள் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விட்டு, ஆளும்கட்சியானவுடன் பெயரை மாற்றி திட்டத்தைச் செயல்படுத்தும் திமுகவிடம் இப்படியொரு கேள்வியை நீங்கள் கேட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

Q

ஒருபுறம் இலவசங்கள் மாநில நிதிநிலைக்குச் சுமை என்று சொல்கிறீர்கள்; மறுபுறம் திமுகவுக்குப் போட்டியாக ‘ஃபிரிட்ஜ்' வழங்குவோம், ரூ.2000 உரிமைத்தொகை தருவோம் என புதிய வாக்குறுதிகளை அறிவிப்பது ஏன்?

A

இலவசம் என்று சொல்லாதீர்கள். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் விலையில்லாமல் குடும்பத்துக்குத் தேவையானவற்றை வழங்க விரும்புகிறோம். அந்த அடிப்படையில்தான் ஃபிரிட்ஜ் தருவதாகச் சொல்லியிருக்கிறோம். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வங்கிக் கணக்கு மூலம் ரூ.10000 வரவு வைப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மக்கள் எங்களுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். இந்த செலவினங்களைச் சமாளிக்க வேண்டிய நேரத்தில், அரசின் நிதிநிலையை உயர்த்தும் வல்லமை எங்களிடம் உண்டு. தமிழக அரசின் 75 ஆண்டு கால கடன் தொகையான ரூ.5 லட்சம் கோடியை ஐந்தே ஆண்டில் வாங்கி ஊதாரித்தனமாக திமுக அரசு செலவு செய்ததுபோல் அதிமுக அரசு செயல்படாது.

Q

உங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘குடிமராமத்து’ திட்டமும், மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடும் விவசாயிகளின் ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த நிர்வாகத் திறமை உங்களை மீண்டும் முதல்வர் அரியணையில் ஏற்ற உதவும் என்று நம்புகிறீர்களா?

A

நிச்சயம் நம்புகிறேன். திமுக அரசால் முடக்கப்பட்ட குடிமராமத்து திட்டம் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும். 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் படித்துவரும் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் வாழ்க்கை உயர்ந்திருப்பது நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறது. அனைத்து நல்ல திட்டங்களும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் உயிர் பெறும் என்று உறுதி அளிக்கிறேன்.

<div class="paragraphs"><p>சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நேர்காணலின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன்.  </p></div>
‘ஹிட்’ ஆனதா ரூ.8000 கூப்பன்? - சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in