இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
Updated on
1 min read

சென்னை: மத்​தி​யப் பிரதேசம் மாநிலம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கோல்ட்​ரிப் இருமல் மருந்து குடித்த 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். இதையடுத்து அந்த மருந்தை தயாரித்த தமிழகத்​தைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்​மாசூட்​டிக்​கல் நிறு​வனத்​தின் உரிமம் ரத்து செய்​யப்​பட்டு ஆலை மூடப்​பட்​டது.

பின்​னர் அம்​மாநில போலீ​ஸார் நிறுவன உரிமை​யாளர் ரங்​க​நாதனை கைது செய்​தனர். மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக, மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை இணை இயக்​குநர் கார்த்​தி​கேயன் உள்​ளிட்ட அதி​காரி​களை சஸ்​பெண்ட் செய்து தமிழக அரசு உத்​தர​விட்​டது.

முறை​யான அனு​மதி இல்​லாமல் இந்​நிறுவன மருந்தை ஏற்​றுமதி செய்ய தடை​யின்மை சான்று வழங்க சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு லட்​சக்​கணக்​கில் பணம் கொடுக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும் புகார் எழுந்​தது.

இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை​யின் இணை இயக்​குந​ரான கார்த்​தி​கேயன் மீது வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்​புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் நிறு​வனம் மற்​றும் அதன் உரிமை​யாளர் ரங்​க​நாதன் உள்​ளிட்​டோர் மீது அமலாக்​கத் துறை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது.

ரூ.2.04 கோடி சொத்​து: இதன் தொடர்ச்​சி​யாக கடந்த அக்​டோபர் மாதம் சென்​னை, காஞ்​சிபுரத்​தில் அந்​நிறு​வனம் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களை ஆய்வு செய்த அமலாக்​கத் துறை அதி​காரி​கள், ரங்​க​நாதன் மற்​றும் அவரது குடும்ப உறுப்​பினர்​களின் ரூ.2.04 கோடி மதிப்​புள்ள அசையா சொத்​துக்​களை முடக்​கி​யுள்​ளனர்.

இதுகுறித்து அமலாக்​கத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: ஸ்ரீசன் பார்​மாசூட்​டிக்​கல் நிறு​வனம் தனது லாபத்தை உயர்த்​திக்​கொள்ள சட்​ட​விரோத வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.

இருமல் மருந்து தயாரிக்க தரமற்ற மூலப்​பொருட்​களை பயன்​படுத்​தி​யதுடன், முறை​யாக தரப் பரிசோதனை செய்​யாமல், ரசீதுகள் இன்றி மூலப்​பொருட்​களை வாங்​கியதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

மேலும் அந்​நிறு​வனத்​தின் உரிமை​யாள​ருடன் தமிழக மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி​கள் தொடர்​பில் இருந்து கொண்​டு, சட்​டப்​படி நடத்தவேண்டிய வரு​டாந்திர ஆய்வு மற்​றும் தணிக்கைகளை நடத்​த​வில்​லை. இது தொடர்​பாக, மருந்து நிறு​வனத்​தின் உரிமை​யாளர் தொடர்​புடைய 10 இடங்​களில் சோதனை நடந்தது.

சோதனை​யில் நிறு​வனம் தொடர்​பான நிதி ஆவணங்​கள், மருந்து கொள்​முதல் தொடர்​பான ஆவணங்​கள், மருந்து கட்​டுப்​பாட்டு துறை அதி​காரி​கள் சம்​பந்​தப்​பட்ட ஆவணங்​கள், சொத்து ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

பறி​முதல் செய்​யப்​பட்ட சொத்​துகளில், மருந்து நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதன் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு சொந்​த​மான கோடம்​பாக்​கத்​தில் உள்ள ரூ.2.04 கோடி மதிப்​புள்ள 2 வீடு​கள் அடங்​கும். தற்​போது அந்த அசையா சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in