

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார், பொதுச்செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மாதா மாதம் இவர்களது சம்பளத்தில் முறையற்ற பிடித்தத்தை செய்வதுடன், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்குவதில்லை.
இந்த விவகாரத்தில் முதல்வரும். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும், இ-சேவை மைய ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, மண்டல அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்கள் அன்றைய தினம் செயல்படாது.