

கோப்புப் படம்
சென்னை: தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் ‘ஜி-பே’ மூலம் நடைபெற்ற 1 கோடிக்கு மேல் பணப் பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பட்டா பெயர் மாற்றம், சிட்டா, அடங்கல், வருமானம், இருப்பிடம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குதல், நில அளவை, நிலவரி வசூல், அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் போன்ற பணிகள் தாலுகா அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளுக்காக சில அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவின்பேரில், நேற்று மாலை 5 மணி முதல் மாநிலம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தனிப்படைகள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டன.
சென்னை சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ‘ஜி-பே’ மூலம் ரூ.6 லட்சம் வரை பணப் பரிமாற்றம் நடைபெற்றது கண்டறியப்பட்டது. சென்னை மாநகரில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட தாலுகா அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
திருவள்ளூர், திருச்சி கிழக்கு, செந்துறை, வேப்பந்தட்டை, சீர்காழி, திருவோணம், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிதம்பரம், மேல்மலையனூர், சின்னசேலம், கோவை வடக்கு, உடுமலை, தலைவாசல், கோபி, குமாரபாளையம், கிருஷ்ணகிரி மற்றும் நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தாலுகா அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.7 ஆயிரம் ரொக்கமும், ‘ஜி-பே’ மூலம் ரூ.12 லட்சம் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டது. பல இடங்களில் இரவு 9 மணியை தாண்டியும் சோதனை நீடித்தது. டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஜி-பே மூலம் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கைமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.