

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக நகரமைப்புப் பிரிவில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
சென்னை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.58 லட்சம் கைப்பற்றப்பட்டது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கின.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளுக்கு நிர்ணயிக்கப் பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சில அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, கட்டிட வரைபட அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றம், வரி மதிப்பீடு மாற்றம், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பிறப்பு - இறப்பு பதிவுகளில் திருத்தம், ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கைகள், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கான பில் ஒப்புதல், சாலை, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள், அரசு வீடு திட்ட பயனாளிகள் ஒப்புதல், சுயஉதவிக் குழு திட்டங்கள், கிராம பஞ்சாயத்து நிர்வாக அனுமதிகள், அரசு நலத்திட்டங்களில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணம் கொடுக்காதவர்களின் கோப்புகள் வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுவதாகவும், சில நேரங்களில் காரணமின்றி நிராகரிக்கப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள்: இந்த புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான அருண், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாள் முழுக்க வசூலாகும் தொகை மாலை நேரத்தில் அதிகாரிகளிடம் அதிகம் இருக்கும் என்பதால், நேற்று அலுவலகப் பணி முடியும் நேரத்தில் திடீரென போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது. சென்னையில் கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயபுரம், பெருங்குடி ஆகிய 6 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகம், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம், தாம்பரம், புதுக்கோட்டை, கரூர், கும்பகோணம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, காரைக்குடி மாநகராட்சிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், தென்காசி, கன்னியாகுமரி, தருமபுரி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வாலாஜா, போடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருத்தணி நகராட்சிகள், தாடிக்கொம்பு, ஊத்துக்குளி, கடலூர் - மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. பல அலுவலகங்களில் இரவு வரை சோதனை நீடித்தது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.7.50 லட்சம், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.97,600, தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ரூ.43,160 கைப்பற்றப்பட்டன. ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு ஆய்வாளர் காளீஸ்வரியிடம் இருந்து ரூ.2 ஆயிரமும், ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் பாண்டியனிடம் இருந்து ரூ.4 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
'ஜி-பே' பரிவர்த்தனைகளும் ஆய்வு: சோதனையின்போது பல அலுவலகங்களில் கணக்கில் வராத ரொக்கப் பணம் மட்டுமின்றி, ‘ஜி-பே’ உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளில் பணம் பரிமாறப்பட்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில், பெண் பொறியாளரின் வங்கிக் கணக்குக்கு ‘ஜி-பே’ மூலம் வந்ததாக கூறப்படும் ரூ.1.50 லட்சம் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டன. அங்கிருந்த பிற ஊழியர்களிடம் இருந்து ரூ.23,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31.21 லட்சம், ‘ஜி-பே’ பரிவர்த்தனை மூலம் ரூ.26.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான உரிய ஆவணங்கள், பணம் பெற்றதற்கான காரணம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.