

அதிமுக தலைமை அலுவலகம்
சென்னை: கடலூர் அருகே குடிபோதையில் ஓட்டுநர் இயக்கிய தனியார் பள்ளி வேன் மோதி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் வசிக்கும் மதி என்பவரும், அவரது மகன் மனோஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் 22.12.2025 அன்று காலை கோணூர் - பெண்ணாடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளி வேன் மோதி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துவிட்டனர்.
பள்ளி வேன் ஓட்டுநரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், தனியார் பள்ளி வாகனத்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் வாகன தகுதிச் சான்றிதழும் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்கள் பணியினை சரியாக செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. எனவே இந்த விபத்திற்கு திமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேருந்துகளில் உள்ள தகுதிச் சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்விபத்தில் தந்தை மகன் இருவரையும் இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்குவதுடன், அரசு நிவாரணத் தொகையாக தலா 25 லட்சம் ரூபாயை வழங்க திமுக அரசை வலியுறுத்துகின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.