

சென்னை: மருத்துவக் கல்விக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி, திராவிடர் கழகம் சார்பில், மாநிலம் தழு விய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக, விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றன.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.க தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி பேசுகையில்,"நடப்பு கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள் கசிவுகளும், 48 முறை மறுதேர்வுகளும் நடந்துள்ளன. நீட் தேர்வு என்பது ஒட்டுமொத்தமாக ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியிருக்கிறது. எனவே, இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை நமது போராட்டம் தொடரும்' என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, "நீட் தேர்வின் வருகையால் எளிய மக்கள் இனி மருத்துவக் கல்வி பெறவே முடியாது என்ற நிலையை உருவாக்கி, வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலையை இத்தேர்வு ஏற்படுத்தியுள்ளது" என்றார்.