

சென்னை: சென்னை மாவட்ட, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மண்டலம் 9 முதல் 15 வரை உள்ள திருநங்கைகளுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மருத்துவமனைகளிலும், டாக்டர்கள் முழு நேர பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மழை தொடங்கிய பின்பு, ஒரு பகுதியில் காய்ச்சல் பாதிப்புகள் 2 பேருக்கு மேல் வந்தாலே, அங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் மின்சாரம் தடைபடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மருத்துவ பேராசிரியர் பதவி உயர்வு நேர்மையாக வெளிப்படைத் தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.