

வைகோ
ணநெல்லை: “திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
நெல்லை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கு நிகழ்வு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மதிமுக துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவரிடம் நெல்லை மண்டல மதிமுக சார்பில் ரூ. 2 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது .
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, ”வைகோ நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துவிட்டார், அவரால் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர். அதை முறியடிக்கவே திருச்சி மலைக்கோட்டையிலிருந்து மதுரை வரை 180 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொண்டேன்.
நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறேன், உண்ணாவிரதம், மறியல், நடைப்பயணம் என பல போராட்டங்களை முன்னெடுத்து உள்ளேன்
13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகமே காரணம். விடுதலைப் புலிகள் மீது பழிபோட முயன்ற காவல் துறையின் சதி முறியடிக்கப்பட்டது. தற்போது வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், "காப்பர் கிரீன்" (Copper Green) என்ற பெயரில் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறார்.
குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விரட்டப்பட்ட இந்த ஆலை தமிழகத்துக்குத் தேவையில்லை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது. வேதாந்தா குழுமம் தமிழகத்தில் நுழைய இடமளிக்கக் கூடாது. மீறி ஆலையைத் திறக்க முயற்சித்தால், தூத்துக்குடி மக்களைத் திரட்டி இதுவரை கண்டிராத அளவிலான மிகப்பெரிய அறப்போராட்டத்தை முன்னெடுப்பேன்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது . திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அழைப்பு விடுத்தவுடன், 3 மணி நேரத்துக்குள் இந்தக் குழு பேச்சுவார்த்தைக்குச் செல்லும்” என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, “ஓபிஎஸ் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, தனது தன்மானத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் காத்துக்கொள்ள அவர் எடுத்த முடிவு சரியானது. அதைத் நான் வரவேற்கிறேன்” என்று கூறினார்.
மேலும், “அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு சிறந்த ஜனநாயகவாதி, மதச்சார்பின்மையை மதித்தவர். மோடி ஒரு "தந்திரசாலி". அவர் தமிழகத்தை ஏமாற்றப் பார்க்கிறார். வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்து பாஜகவுக்கும், இப்போதைய பாஜகவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
தேசிய கீதமான "ஜன கண மன" அனைத்து மதத்தினராலும் ஏற்கப்பட்டது. ஆனால், "வந்தே மாதரம்" பாடலில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற இந்து தெய்வங்களைக் குறிப்பிடுவதால், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதைப் பாடுவதில் சிக்கல் உள்ளது. இதை கட்டாயமாக்க முயற்சிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது.
பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய அந்தப் பாடலின் சில பகுதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக, முன்பு அம்பேத்கர் தலைமையிலான குழுவே இதை நிராகரித்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவார்கள், சிறுபான்மையினரின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறிப்பார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பார்கள்.
வரவிருக்கும் தேர்தல் ஒரு பெரிய அக்னிப் பரீட்சை அல்ல. திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும். நாட்டின் ஒருமைப்பாட்டையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்க பாஜகவை வீழ்த்த வேண்டியது அவசியம். தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது கூற இயலாது” என்றார்.
ஆறாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நான். அது குறித்து கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்” எனக் கூறினார்.