

புதுச்சேரி: சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும், பல்கலைக்கழக அதிகாரத்தை பறிக்கும் விபிஎஸ்ஏ முறையை திரும்ப பெற வலியுறுத்தியும் வரும் 23-ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி செயலாளர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மாணவர் அணிச் செயலாளர் வீரமணி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, "பிஎம்ஸ்ரீ விவகாரத்தில் தமிழக தவெக அரசு மவுனம் காக்கிறது. இதில் பரிசீலனை செய்வதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வியை அடமானம் வைக்க தவெக அரசு துணிந்து விட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை ஜூலையில் அமலாக்க திட்டமிட்டுள்ளனர். இதை அமலாக்க விடமாட்டோம்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் பல்கலைக்கழக அதிகாரத்தை பறிக்கும் விபிஎஸ்ஏ முறையே திரும்ப பெற வலியுறுத்தியும் ஜூன் 23-ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். முதலில் 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு மதிப்பெண் இல்லை எனக்கூறிவிட்டு பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கொண்டுவருவார்கள்" என்றனர்.