

தஞ்சாவூரில் எல்.கணேசன் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின். (உள்படம்) எல்.கணேசன்.
தஞ்சாவூர்: திமுகவின் மூத்த தலைவர் எல்.கணேசன் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்தவர் எல். கணேசன்(91).
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரான இவர், ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதேபோல, சொந்த ஊரில் 7 முறை ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். 1993-ல் வைகோ மதிமுகவை தொடங்கியபோது, அவைத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் நெருங்கிப் பழகியவர். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை எல்.கணேசன் தஞ்சாவூரில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி கமலா மற்றும் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி கமலா, மகள் மற்றும் மகன்களிடம் ஆறுதல் கூறினார்.
அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், டிஆர்பி.ராஜா, ரகுபதி, எம்.பி.க்கள் டிஆர்.பாலு, ச.முரசொலி மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தலைவர்கள் இரங்கல்: திமுக முன்னாள் எம்.பி. எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.