

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம் உள்ளதாக தெரிவித்த திமுக நிர்வாகி ராமமூர்த்தி உள்ளிட்டோர்.
விருதுநகர்: விருதுநகரில் நடந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம் உள்ளதாக திமுக நிர்வாகி ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஜெகதீஸ்வரி 65,548 வாக்குகள் பெற்றுவெற்றிபெற்றார்.
திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் 54,943 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் 36,318 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 16,972 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டாவில் 753 வாக்குகள் பதிவாகி இருந்தன. திமுக வேட்பாளரைவிட 10,605 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வெற்றிபெற்றது.
இந்நிலையில், ராஜபாளையம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை சரிபார்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூருவிலிருந்து பெல் நிறுவன பொறியாளர்கள் புதன்கிழமை விருதுநகர் வந்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் திறக்கப்பட்டது. திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் சார்பில் கட்சி நிர்வாகி ராமமூர்த்தி முன்னிலையில் மாதிரிக்காக 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு மறுவாக்குப்பதிவு நடத்தி சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஆட்சேபம் உள்ளதாக திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனின் அதிகாரம் பெற்ற முகவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாகம் எண் 206-ல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு யூனிட் ஒருபக்கம் சீல் வைக்கப்படவில்லை, கையொப்பம் இல்லை. இதில் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதால் ஆட்சேபிக்கிறோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அளித்துள்ளோம் என கூறினார்.