

ஆர்.எஸ்.பாரதி
சென்னை: “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக மிசாவையே பார்த்த கட்சி. பல்வேறு அடக்குமுறைகளை கண்டுள்ளோம். இது போன்ற பூச்சாண்டிகளை விஜய் காட்டமுடியாது. திமுகவின் வரலாறை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நேற்று சட்டப்பேரவையில் ஆடியதைப் போல, இன்று ஆட முடியாது. மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
திமுக ஆதரவாளரான ஜென் ஸீ இளைஞர் கனிஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில், இன்னும் 24 மணி நேரத்தில் தவெக-வைச் சேர்ந்த குற்றவாளிகள் மீது எப்ஐஆர் போடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சைதாப்பேட்டை காவல்நிலையம் முன்பு திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். இது பெரியார் பூமி. தமிழக மக்கள் இந்த மாயாஜாலங்களுக்கு அடிபணிய மாட்டார்கள். நடந்தது நடந்துவிட்டது.
தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், தமிழ்நாட்டில் நிகழும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளில் அக்கறை காட்டாமல், விஜய் மீது விமர்சனம் வைப்பவர்களை, ஆட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை இந்த அரசு குறிவைக்கிறது.
பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு பதிலளிக்காமல், அதை விமர்சிக்கும் திமுக இளைஞரணியினர், ஜென் ஸீ தலைமுறையினர் மீது தவெக அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. இன்ஸ்டா, சமூக வலைதளங்கள் மூலம் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை மறந்துவிட்டனர்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். எங்களுக்கு மக்கள் நலனே பெரிதாக இருந்ததால், நாங்கள் அதை லேசாக விட்டுவிட்டதன் விளைவு, தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தினால், திமுகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தால், போலீஸ் எப்ஐஆர் கூட போட மறுக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.