மதுரையில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக: நயினார் வலியுறுத்தல்

மதுரையில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக: நயினார் வலியுறுத்தல்
Updated on
2 min read

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு, உயிரிழந்தவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பூர்ண சந்திரன். இவர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என வாட்ஸ்-அப்பில் குரல் பதிவு அனுப்பிவிட்டு தல்லாகுளம் பெரியார் சிலை அருகே உடல் முழுவதும் டீசலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

பூர்ண சந்திரன் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் அவமதிப்பு செய்தது. இதனால் மன உளைச்சல், வேதனை அடைந்து என் மறைவுக்கு பிறகாவது திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன் உடலை தீபமாக, தீப்பந்தமாக எரித்து உயிரிழந்துள்ளார் பூர்ணசந்திரன்.

அவரது இறப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பூர்ணசந்திரன் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதில் அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாது என தமிழக முதல்வரை அனைத்து மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு பல்வேறு அமைப்புகள் உதவி செய்யவுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை மாலை பூர்ணசந்திரன் படத்துக்கு மரியாதை செலுத்தி கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால் அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுக்கும் போது இதையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு பிரச்சினைகள் வரலாம். குடும்பப் பிரச்சினை, பொதுப் பிரச்சினை, மதம் சார்ந்த பிரச்சினை எதுவாக இருந்தாலும் எதிர்த்து போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாகும். நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி நீதியை வெல்ல வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்வது நல்ல செயலாக இருக்காது என இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்த பெரியார் சிலை அருகே பூர்ணசந்திரன் உயிரிழந்ததில் எவ்வளவோ அர்த்தங்கள் உள்ளன. இதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரம் மதம் சார்ந்த பிரச்சினை அல்ல. கார்த்திகை தீபம் ஏற்றுவது தமிழர்களின் பண்பாட்டு உரிமை. இதில் உரிய கவனம் செலுத்தி தீபம் ஏற்ற வேண்டும். 2026=ல் பூர்ணசந்திரனின் கனவான தீபம் ஏற்றுவது நடந்தே தீரும்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரையில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக: நயினார் வலியுறுத்தல்
புதுச்சேரி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பாஜக புதிய செயல் தலைவர் நிதின் நிபின் நாளை சந்திப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in