

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜன.20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்துவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆளும் திமுக, கடந்த ஓராண்டுக்கு முன்னரே பூத் கமி்ட்டி அமைத்தல், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நிகழ்வுகள், உடன்பிறப்பே வா என கட்சியினரை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதுதவிர, கட்சியில் ஒருங்கிணைப்புக்கான குழுவும் அமைக்கப்பட்டது. கனிமொழி எம்பி தலைமையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரி்ப்புக்குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கவும், தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கவும், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் ஜன.20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள்,எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.