

சிவசங்கர்
பெரம்பலூர்: திமுக- அதிமுக கூட்டணி என்பது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வகுத்த வியூகம். சமூக வலைதளத்தில் அவர் பரப்பும் வதந்தியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நேற்று எம்எல்ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தேர்தல் பிரச்சாரத்தின்போதே திமுக- தவெக இடையே தான் போட்டி என முதல்வர் விஜய் தெரிவித்தார். இன்றுவரை அதே கருத்தைத்தான் அவர் முன்வைக்கிறார். இந்த கருத்தை சுட்டிக்காட்டிதான் இரு துருவ அரசியலை முன்னெடுக்க தவெக முனைப்புடன் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். மாறாக, திமுக மீதான வெறுப்பில் அவர் பேசவில்லை.
அதிமுக கூடாரத்தை காலி செய்ய வேண்டும் என்பதே முதல்வர் விஜயின் எண்ணம். தவெகவின் இந்த செயல்பாட்டுக்கு தோழமைக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் முடியாமல், ஆதரவு அளிக்கவும் முடியாமல் தவிக்கின்றன. திமுக ஆட்சியின்போது கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினை, தோழமைக் கட்சியினர் நேரடியாக சந்தித்து பேசமுடியும்.
ஆனால், இப்போது முதல்வர் விஜய்யை தோழமைக் கட்சியினர் சந்திக்க முடியவில்லை. திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்ததாக குற்றம்சாட்டிய முதல்வர் விஜய், தற்போது நாகர்கோவில் லாக்கப் மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? திமுக- அதிமுக கூட்டணி என்பது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வகுத்த வியூகம். சமூக வலைதளத்தில் அவர் பரப்பும் வதந்தியை யாரும் நம்பத் தயாராக இல்லை.
தற்போது வரை புதிய திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்கின்றனர். பாஜகவால் நேரடியாக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எனவேதான், அண்ணாமலை போன்றவர்களை களத்தில் இறக்கிவிட்டு கால் பதிக்க திட்டமிட்டுள்ளது என்றார்.