

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக போலீஸார் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்ட அளவில் கணினி குலுக்கல் மூலம் பிரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொகுதிவாரியாக அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மற்றும் வாக்காளர், தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (விவிபாட்) முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் தலா 90 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 97,500 விவிபாட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் பயன்பாடு போக, பழுதாகும்போது மாற்றுவதற்கான 20 சதவீத இருப்பு வைப்பு இயந்திரங்களும் அடங்கும். மாவட்ட அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் தொகுதிவாரியாக பிரிக்கும் பணி மார்ச் 23-ல் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இயந்திரங்களை தொகுதிவாரியாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் செயல்படும் வைப்பறைக்குக் கொண்டு செல்லும் பணி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று தொடங்கியது.
அதன்படி சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது.
இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் பணிகள் நேற்று தொடங்கின.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலக வளாகத்தில் இன்று பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.