

திண்டுக்கல்: வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி நீக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஒன்றிய கிராமங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் நீர்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளன.
இந்த இரண்டு நீராதாரங்கள் மூலம் திண்டுக்கல் நகரின் 48 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் ஆத்தூர் நீர்த்தேக்கம் தற்போது வறண்டுவிட்டது. இதுபோன்ற வறட்சிக் காலத்தில் திண்டுக்கல் மாநகரின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கூடுதலாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த ஆட்சிக் காலத்தில் வைகை அணையில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டுவர ரூ.560 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராமங்கள், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகள் பயனடையும் வகையில் திட்ட அறிக்கை இருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் நகரப் பகுதிகள் கூடுதலாக குடிநீர் ஆதாரத்தைப் பெற்று குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக் காணப்படும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், வைகை அணையில் இருந்து நேரடியாக குடிநீர் பெறும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சியை குடிநீர் வடிகால் வாரியம் நீக்கியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதைத் தவிர்த்து வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத் திட்ட அறிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.560 கோடி எனும் திட்ட மதிப்பீடு குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பார்த்தசாரதி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: வைகை அணை மூலம் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுதவிர பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இவற்றுக்கே போதுமான நீர் வைகை அணையில் இருந்து பெறப்படுவதில் சிக்கல் ஏற்படும். அதுவும் வறட்சிக் காலங்களில் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாதநிலை இருக்கும்போது, கூடுதலாக அங்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவது என்பது சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியை மட்டும் விடுவித்து மற்ற பகுதிகளுக்கு மட்டும் வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு காவிரியில் இருந்து குடிநீர் வழங்கக் கூடுதலாக ஒரு குடிநீர் திட்டத்தை தயாரிக்கப் பரிசீலிக்கப்படுகிறது, என்றார்.