

டிடிவி தினகரன்|கோப்புப் படம்
சென்னை: கடந்த 2016 நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு சட்டத்தின் கீழ் செல்லாதவை என மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட இந்த ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி வி.கே.சசிகலா பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தை விலைக்கு வாங்கியுள்ளதாக 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையின் மூலம் தெரியவந்தது.
அதையடுத்து அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர்களான கங்கா பவுண்டேஷன், பாலாஜி, வி.எஸ்.ஜெ.தினகரன் ஆகியோர் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் வி.எஸ்.ஜெ.தினகரனுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் முடக்கத்தை உறுதி செய்ய மறுத்து வருமான வரித்துறை தீர்ப்பாய அதிகாரி உத்தரவிட்டார். அதை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 763 நாட்கள் காலதாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த காலதாமதத்தை ஏற்றுக்கொண்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது. இதை எதிர்த்து வி.எஸ்.ஜெ.தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணும், வருமான வரித்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷீலாவும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 763 நாட்கள் கால தாமதத்தை ஏற்று பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது. மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு தன்னிச்சையானது எனக்கூற எந்த முகாந்திரமும் இல்லை” எனக்கூறி வி.எஸ்.ஜெ.தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.