

சென்னை ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பொங்கல் வைத்தார். அருகில், ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி மற்றும் பேராசியர்கள் உள்ளனர்.
சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தார். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி ஊழியர் மன்றம் மற்றும் முத்தமிழ் மன்றம் சார்பில், பொங்கல் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி நடைபெற்ற ஐஐடி சமூக கூடத்துக்கு அமைச்சர் வருகை தந்தபோது, அவருக்கு பாரம்பரிய தமிழ்க் கலாச்சார முறைப்படி பறை, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கிராமிய நடனங்களுடன் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.
கோலமிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்ட பொங்கல் பானையில் மத்திய அமைச்சர் பொங்கல் வைத்த போது, ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கல் திருநாளில் பண்டிகை உணர்வை பிரதிபலிக்கும் வகையில், ஐஐடி நிர்வாகத்தினர் உருவாக்கிய பிரம்மாண்ட பொங்கல் கோலத்தை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, ஐஐடி ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் பேசியதாவது: தமிழகத்துக்கு வந்து பொங்கல் விழாவை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அறுவடைத் திருநாளான பொங்கல் விழா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என்ற பெயரிலும் பஞ்சாபில் லோஹிரி என்ற பெயரிலும் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு பிராந்தியத்தில் உத்தராயன் என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நான் சார்ந்துள்ள கிழக்கு பிராந்தியத்தில் மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் ஒற்றுமையை பொங்கல் பண்டிகை வலுப்படுத்துகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பின்னர் ஐஐடி இயக்குநர் காமகோடி வாழ்த்திப் பேசும் போது, “விவசாயத்தையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளையும் கவுரவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா அனைவருக்கும் நம்பிக்கையின் புதிய சக்தியை அளிக்கிறது” என்றார்.
பொங்கல் விழாவின் பாரம்பரிய கொண்டாட்டமான உறியடி நிகழ்ச்சியிலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று மகிழ்ந்தார்.