

சென்னை: பொங்கல் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி: தமிழ் கலாச்சாரத்தையும், இயற்கையுடனான நமது பிணைப்பையும் பொங்கல் கொண்டாடுகிறது. இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இயற்கைக்கு மரியாதை செலுத்துவதை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற பொங்கல் நம்மை ஊக்குவிக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி: உலகம் முழுவதும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல் வாழ்த்துகள். ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இப்பண்டிகை வழிநடத்தட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள், தைத்திருநாள், உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாக திகழ்வது பொங்கலாகும். உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக் கோலம், விளையாட்டுப் போட்டிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழகமெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைய எனது நல் வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: உழவுத் தொழிலை மையமாகக்கொண்ட தமிழரின் வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டுக் கொண்டாட்டமான பொங்கல் திருநாளில், உலகத் தமிழர் அனைவருக்கும் எனது உளமர்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: உழைப்பை போற்றும் உன்னத திருவிழாவான இந்த நன்னாளில் இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கி, நம் அனைவரின் உள்ளத்திலும் ஊக்கமும், உத்வேகமும் சிறந்து விளங்கட்டும்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தி.க. தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மநீம தலைவர் கமல்ஹாசன், தவாக தலைவர் வேல்முருகன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பெருந் தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக நிர்வாகி சரத்குமார், இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி நிறுவனர் எம்.எஸ்.மார்டின், இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊர்களில் உற்சாகம்: சென்னை, கோவை, மதுரை,திருப்பூர், திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்கள் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.