

சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக விரிவான சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம நிலங்களை ஆக்கிரமித்து, மின்சார துணை நிலையம் மற்றும் தனியார் பாதை , மாணவ - மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாக கூறி, கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிராமத்துக்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எந்த ஓர் அடிப்படை வசதிகளும் இல்லாததால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சர்வே அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.