

பாராபங்கி: "பாபர் மசூதியை மீண்டும் ஒருபோதும் கட்ட முடியாது. அதைப் பற்றி கனவு காண்பவர்கள் நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "பாபர் மசூதியை கட்ட கனவு காண்பவர்களுக்கு, அந்த தீர்ப்பு நாள் (judgement day) ஒருபோதும் வராது என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன். எனவே அந்தத் தீர்ப்பு நாளுக்காக வாழாதீர்கள்.
இந்தியாவில் உள்ள விதிகளின்படி வாழ கற்றுக் கொள்ளுங்கள். நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படியுங்கள். யாராவது விதிகளை மீறினால், அந்தப் பாதை அவர்களை நேராக நரகத்திற்கு இட்டுச் செல்லும். சட்டங்களை மீறி சொர்க்கம் செல்வதாக யாராவது கனவு கண்டால், அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது" என்றார்.
மேலும், "சில சந்தர்ப்பவாதிகள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ராமரை நினைவில் கொள்கிறார்கள், பின்னர் அவரை மறந்துவிடுகிறார்கள். எனவே, ராமரும் அவர்களை மறந்துவிட்டார். அவர்களால் இப்போது வெற்றி பெற முடியாது. ஒருபோதும் முன்னேறவும் முடியாது" என்று அவர் கூறினார்.