

சென்னை : ‘டீப்ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ-யின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஒருவரின் முகம், குரல் மற்றும் உடல் அசைவுகளை அப்படியே நகலெடுத்து, அவர் செய்யாத ஒரு செயலைச் செய்தது போலவும், பேசாத ஒரு விஷயத்தைப் பேசியது போலவும் போலியான வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது ஆடியோக்களை உருவாக்கு வதே ‘டீப்ஃபேக்’ ஆகும். இவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உண்மையானவை போலவே இருக்கும். இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களின் பணத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அதிர்ச்சியூட்டும் அல்லது உணர்ச்சிகரமான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்களை மற்றவர்களுக்குப் பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய வேண்டும். வீடியோ கால் மூலமாகவோ அல்லது அவசரத்தேவை என்று குரல் வழிச் செய்தியாகவோ யாராவது பணம் கேட்டால், உறுதிப்படுத்தாமல் உடனடியாகப் பணத்தை அனுப்பக் கூடாது.
சந்தேகம் ஏற்பட்டால், அந்தச் செயலை உடனடியாக நிறுத்தி, உண்மைத்தன்மையைச் சரிபார்த்து, மோசடி என்று தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவால் நம்ப முடியாத அளவுக்குப் போலிகளை உருவாக்க முடியும். உங்கள் விழிப்புணர்வே உங்களுக்கான முதல் பாதுகாப்பு.
எதையும் நம்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். யாரேனும் இணைய வழி மோசடியால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.