பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம்: குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம்: குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு
Updated on
1 min read

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் சூட்கேஸில் கிடந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பின்னர், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இது குறித்து, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஓட்டேரி போலீஸார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக் குமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீஸார் தலைமையில் 2 தனிப் படைகள் உட்பட 8 தனிப் படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப் படை போலீஸார் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன ஆண் தொடர்பான புகார்களை வைத்தும், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மற்ற மாநிலங்களிலும் இருந்தும் ரயில்கள் வரும் என்பதால், அண்டை மாநிலங்களிலும் காணாமல் போனவர்களின் பட்டியலை கொண்டும் அதில் யாராவது கொல்லப்பட்டுள்ளனரா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலை இல்லாத உடலில் இருந்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். கொல்லப்பட்டவர் உடலில் வேறு எந்த காயம் இல்லை என்றும் மயக்க நிலையிலேயே தலையை வெட்டியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகித்து அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி இல்லை.

ரயில் நிலையத்தில் இருக்கும் சிசிடிவியும் பழுது காரணமாக, சரியாக வீடியோ கிடைக்காததால் ரயில் நிலையத்தின் நுழைவாயில்கள் மற்றும் நிலையத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, அந்த நீல நிற சூட்கேஸைக் கொண்டு வந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம்: குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு
அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in