Cylcone Ditwah updates: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையை நெருங்குகிறது ‘டிட்வா’ புயல் - 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்!
இடம்: பாம்பன் | படம்: எல்.பாலச்சந்தர்

இடம்: பாம்பன் | படம்: எல்.பாலச்சந்தர்

Updated on
2 min read

சென்னை: வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் நாளை (நவ.30) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 280 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 380 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது.

இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) காலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். புயல் நகர்ந்து வரும்போது காலையில், சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவிலும், மாலையில் 25 கிமீ தொலைவிலும் நிலவக்கூடும்.

கனமழையும் தரைக்காற்றும்:

இதன் காரணமாக நாளை (நவ.30) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்திலும், இடையிடையே 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்திலும், இடையிடையே 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

எங்கெல்லாம் மிக கனமழை?

நாளை (நவ.30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவ.30) காலை வரை அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும், டிச.1-ம் தேதி அதிகபட்சமாக 65 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

பதிவான மழை அளவு:

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 25 செமீ, வேதாரண்யத்தில் 19 செமீ, வேளாங்கண்ணியில் 13 செமீ, திருப்பூண்டி, நாகப்பட்டினத்தில் தலா 12 செமீ, தலைஞாயிறில் 11 செமீ, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், காரைக்காலில் தலா 10 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், ராமேஸ்வரம், தொண்டிமண்டபம், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>இடம்: பாம்பன் | படம்: எல்.பாலச்சந்தர்</p></div>
80 NDRF பணியாளர்கள், நிவாரணப் பொருட்களுடன் இலங்கை சென்றது இந்திய விமானப்படை விமானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in