இலங்கை வெள்ளம்: கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை

இலங்கை வெள்ளம்: கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை

Published on

சென்னை: இலங்கையில் கனமழையால் விமானங்கள் இயக்கப்படாததால், அங்கு அவதிப்படும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இலங்கையில் கனமழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சில தினங்களாக விமானங்கள் இயக்கப்படாததால், துபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு வரவிருந்த 300-க்கும் மேற்பட்டோர் இலங்கையின் மத்தளை விமான நிலையத்தி தங்கி, பின்னர் கொழும்பு விமான நிலையத்துக்கு வந்தனர்.

டிட்வா புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 150 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல், அவர்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் தவித்து வரும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமிழக அரசின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கையில் கனமழை, வெள்ளம் காரணமாக விமானங்கள் இயக்கப்படவில்லை. கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்புகொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. அதனால், அங்குள்ள தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.

இலங்கை வெள்ளம்: கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை
இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்: 123 பேர் பலி; அவசர நிலை பிரகடனம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in