

சி.வி.சண்முகம்
சென்னை: “காங்கிரஸும் பாஜகவும் வேறு வேறு ஆட்களாக இருந்தாலும் இருவரது உடம்பிலும் இருப்பது ஒரே ‘ஜீன்’ தான். அவர்கள் அரசியல் செய்வதற்குத்தான் இந்த ‘நீட்’ உதவுகிறது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில், “காங்கிரஸ் உறுப்பினர் பேசும்போது அவர்கள் ஆட்சியில் தான் நீட் கொண்டு வந்ததாக கூறியதற்கு நன்றி. பாஜக அதை மாற்றியிருக்கலாமே என அவர் கேட்டார். உச்ச நீதிமன்றத்தின் ஆணை இருக்கும்போது, எங்களால் அதை மாற்ற முடியாது” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், “காங்கிரஸ் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திருத்தும் போது, நீட்டை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “பாஜகவும் காங்கிரஸும் வேறு வேறாக இருந்தாலும், அவர்கள் உடலில் இருப்பது ஒரே ஜீன் தான். நீட்டை காங்கிரஸ் தான் கொண்டுவந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் தொடர்கிறோம் என பாஜக சொல்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி அந்த தீர்ப்பை செல்லாததாக ஆக்க முடியாதா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ராஜீவ்காந்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதற்கு முன்னுதாரணம் இருக்கிறது; ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பெற்றபிறகு, ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்பது அவர்களின் மதக் கோட்பாடு.
அப்போது ஒரு வழக்கில் ஜீவனாம்சம் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அத்தீர்ப்பை செல்லாததாக மாற்றினார்.
அதுபோலத் தான. அவர்களுக்கு (காங்கிரஸ், பாஜகவுக்கு) உண்மையிலேயே மனமிருந்தால் எப்போதோ நீட்டை ரத்து செய்திருப்பார்கள். மாணவர்களை காப்பாற்றி இருப்பார்கள். ஆனால் இதை வைத்து இருவரும் அரசியல் செய்கிறார்கள். மாணவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.