

நாமக்கல்: நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டை நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக பி.எஸ்.மோகன் அறிவிக்கப்பட்டார். இதற்கு நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவரை மாற்ற வலியுறுத்தி கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.
இந்தச் சூழலில், இன்று காலை முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கட்சியின் பொதுச் செயலாளரை மிரட்டியதால் நாமக்கல் வேட்பாளர் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். நான்கு மாவட்ட செயலாளர்களை நான் பார்த்துள்ளேன்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் அதிமுகவில் பிரச்சினை உள்ளது. ஆனால், அவர்கள் பயந்து கொண்டு மாவட்ட செயலாளர் தங்கமணிக்கு எதிராக பேச மறுக்கின்றனர். நான் அப்படிபட்ட நபர் கிடையாது. நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுப்பது கிடையாது. எனக்கு மட்டும் இல்லை, ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளையும் அழைக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல்லில் எந்தக் கூட்டமும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நடத்தவில்லை. தமிழகம் முழுவதும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் உள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டும்தான் பிரிக்கப்படாமல் உள்ளது. சர்வதிகாரி போல் மாவட்ட செயலாளர் தங்கமணி செயல்படுகிறார்.
கடந்த இரு மாதங்களாக தொகுதி முழுவதும் வேட்பாளர் என சுவர் விளம்பரம், பிச்சாரம் எல்லாம் செய்துள்ளேன். இதனை தங்கமணி சொன்னதால் தான் செய்தேன். கிடா விருந்து நடத்தியபோது நேரில் அழைத்தும் அவர் வரவில்லை” என்றார்.
தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் வேட்பாளர் மாற்றம் செய்ய வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ்கர் ஆதரவு ஒன்றிய செலாளர்கள் கோபிநாத், ராஜா, சேகர், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது நாளை விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.