

தஞ்சாவூர்: ‘காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்காதே’ என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோ. சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர ராமச்சந்திரன், மாநில பொருளாளர் பாஸ்கர், மாநில குழு நிர்வாகி சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது.
மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்தின் உரிமையை பறிக்கின்ற வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம்.
உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரச்சினையின் பின்புலம்:
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவுக் கொண்ட புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது. இதை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில், கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதை பரிசீலித்த மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்கள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருந்ததால், அதை திருத்தி வழங்குமாறு மத்திய நீர்வள ஆணையம் மீண்டும் உத்தரவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஆனால், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை ஏற்கப்படவில்லை என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்தது.
காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.